இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் புதன்கிழமை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
தென்னூரிலுள்ள ராஜாஜி வித்யாலயத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் 1000 பேர் இந்திய வரைபடம் போன்று வடிவில் அந்தந்த மாநிலங்களுக்கான உடைகளை அணிந்து மனிதசங்கிலி போன்று அணிவகுத்தனர்.
இதுபோல, திருச்சி எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தினம் மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் பல்வேறுவிதமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சாதனை முயற்சி : திருவெறும்பூர் மாணிக்கம் நகரில் இயங்கி வரும் ஷார்ப் ஜூனியஸ் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் ஏ.எச். ஷபீ அகமது தலைமை வகித்தார். திருச்சி எய்ம்ஸ் டூ ஹை டிரஸ்ட் நிறுவனர் ஆர். மோகன் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வைத் தொடக்கி வைத்தார். 10 வயதுக்குள்பட்ட 100 மாணவர்கள் இணைந்து 50 மரக்கன்றுகளை ஒரு நிமிஷத்தில் நட்டு சாதனை முயற்சியை மேற்கொண்டனர். இந்த முயற்சி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றை இதன் அமைப்பாளர் ஜெகன் பள்ளி நிர்வாகியிடம் வழங்கினார்.
துறையூர் பள்ளிகளில்...
துறையூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின சிறப்பு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
துறையூர் விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் செல்வி தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். முன்னதாக, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவியரின் பொம்மலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் குழந்தைகள் சுகாதாரம், கற்கும் திறன் மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
துறையூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுரேஷ் ஆறுமுகத்தால் தொகுக்கப்பட்ட சிந்தனைத் துளிகள் புத்தகம் கீரம்பூர், கொத்தம்பட்டி, சித்திரப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.