தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சந்திப்பு ரயில்பாதை கோரிக்கைக்குழு செயலாளர் கோ.சுந்தரவல்லி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சந்திப்பு இடையேயான பகுதிக்கு திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர் தொழிலாளர்கள் அடங்கிய மீட்பு, நிவாரணக்குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதற்கு நன்றியை பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி ரயில் பாதையில் சிறப்பு ரயிலை இயக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் பகுதியில் இருந்தும், புதுக்கோட்டையிலிருந்தும் உள் கிராமங்களுக்கு உதவி, மீட்புப் பொருள்கள் கொண்டு செல்வதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே துறை எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.