முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பகுதியில் மணல் அள்ளுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். இந்தநிலை தொடர்ந்தால் மேலணையின் மீதமுள்ள மதகுகளுக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியில் தற்காலிக பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளுக்காக மதகுகள் உடைந்த பகுதிக்கு அருகில் இருந்தே மணல் அள்ளப்படுகிறது. இதனால் மற்ற மதகுகள் உடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன் கூறியது: தற்காலிப் பணிக்காக புதிதகாக அணை கட்டுவற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மணல் அள்ளுவதால் புதிய கதவணை அமைக்கும் பகுதியில் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகும். மேலும், ஏற்கெனவே உடைந்த மதகுகளில் எஞ்சியுள்ள மதகுகளும் மீண்டும் வெள்ளத்தில் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே, மேலணையில் மணல் அள்ளுவதை கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக அய்யன், பெருவளை, புள்ளம்பாடி பாசனக் கால்வாய்களின் தலைப்பு பகுதிகளில் உள்ள மணல் திட்டுகளில் மணல் எடுக்கலாம் என்றார் அவர்.