திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வளாகத் தூய்மைப்பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் தேசிய மாணவர் படையின் மாணவிகள் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு இணை லெப்டினன்ட் என்.டி. ஸ்ரீநிதிவிஹாசினி தலைமை வகித்தார். துறைக் கட்டடங்களைச் சுற்றி கிடந்த பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காய்ந்த இலை-தழைகள், குப்பைகளை தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் அகற்றினர். மேலும், வளாகத்தில் உள்ள மரங்களைச் சுற்றி தண்ணீர் ஊற்றுவதற்காக தோண்டப்பட்ட இடங்களை ஆழப்படுத்தினர். வாரத்தின் இறுதிநாள்கள் அல்லது காலைகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் மாணவிகளின் சமூகப் பொறுப்புணர்வு மேம்படும் என்று ஸ்ரீநிதி விஹாசினி தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் மேலாண்மைத் துறையில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் இடத்துக்குச் சென்ற மாணவிகளுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.