சூரியூரில் மத்திய அரசு நிறுவனமான படைக்கலன் தயாரிப்பு தொழிற்சாலை (எச்ஏபிபி) அருகே பணியாளர் குடியிருப்பு உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் மருத்துவராக பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றார். சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த 4 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதேபோல, ராமச்சந்திரன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் ரமேஷின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலின் பேரில் ஊர் திரும்பிய அவர், வீட்டினுள் சென்று பார்த்த போது 25 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே குடியிருப்புப் பகுதியில் சில நாள்களுக்கு முன் இரு வீடுகளில்
7 பவுன் நகை திருடு போனது குறிப்பிடத்தக்கது.