திருச்சியில் மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 6,000த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
திருச்சி ஆத்மா கல்வி, ஆராய்ச்சி அமைப்பு, ஆத்மா மன நல மையம் சார்பில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை, மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) என்.எஸ்.நிஷா தொடக்கி வைத்தார். 41 வயதுக்கு மேற்பட்டோர், 40 வயதுக்குள்பட்டோர், 10 முதல் 16 வயதுக்குள்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட மாரத்தானில் 6,000த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நீதிமன்ற இணைப்புச்சாலை, பாரதிதாசன் சாலை வழியாகச் சென்ற மாரத்தான் ஓட்டம் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நிறைவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பரிசுகள் வழங்கினார். ஆத்மா கல்வி, ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மனநல மையத்தின் தலைவர் , நிர்வாக அறங்காவலர் மருத்துவர் கே.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.