தூய்மையே சேவை என்னும் திட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செப்.15 முதல் அக்.2 வரை தூய்மையே சேவை என்னும் அடிப்படையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தூய்மைப் பணியும், தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்தூய்மை பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து கையுறை அணிந்து அனைத்துப் பகுதிகளிலும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றினர். பின்னர், ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
தமிழகத்தில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக 16 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், திருச்சி மாவட்டமும் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து திருச்சி மாவட்டம் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும்.
கிராமம் தூய்மையாக இருந்தால்தான் சுற்றுச் சூழலை பேண முடியும். கிராமங்கள் மட்டுமன்றி நகரம், மாநகரம், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முழு சுகாதாரத்தில் திருச்சி மாவட்டம் முதன்மை மாவட்டமாக இடம் பிடிக்க வேண்டும்.
இதற்காக மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் தூய்மை சேவை என்னும் அடிப்படையில் தூய்மை பணி நடைபெறுகிறது. சிறந்த பணியாற்றிய ஊராட்சிகளுக்கு அக்.2இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
முன்னதாக முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர் விழி, கனிம வள உதவி இயக்குநர் அண்ணாதுரை, மகளிர் திட்ட அலுவலர் பாபு, தூய்மைப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.