துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கடைவீதியை நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்ற இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதியர் காயமடைந்தனர்.
தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம், உத்தமப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அ.பழனியாண்டி (42), அவரது மனைவி பெரியநாச்சி (38) என்பதும், உறவினர் வீட்டுக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.
மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனியாண்டி உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.