தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவராக சிவகங்கையைச் சேர்ந்த பீட்டர்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவராக சிவகங்கையைச் சேர்ந்த பீட்டர்ராஜா, மாநில பொதுச்செயலாளராக திருவள்ளூரைச் சேர்ந்த ராஜு, மாநில பொருளாளராக திருச்சி, இனாம் பெரியநாயகி சத்திரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசன், மாநில அமைப்புச் செயலராக தருமபுரி இளங்கோ, தலைமை நிலையச் செயலாளராக காஞ்சிபுரம் மாயகிருஷ்ணன் மற்றும் சட்டச் செயலாளர்கள், மகளிர் அணிச் செயலர்கள், மாநில துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் இருந்து, சுமார் 400க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும், சங்கத்தின் புரவலர் அருள்சுந்தர்ராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் பொதுச்செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.