சட்டக்கல்லூரிக்கு சென்றதாகக் கூறி, தவறான முறையில் தேர்வெழுதி வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வருபவர்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி வழக்குரைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்படிப்புக்காக முறையாக கல்லூரிக்குச் செல்லாமல், மாற்றுப் பணியில் இருந்து கொண்டே சட்டக்
கல்லூரிக்குச் சென்றதாகக் கூறி தேர்வெழுதி படித்து வழக்குரைஞர்களாகப் பணியாற்றுவர்கள் குறித்து தகவல் அளிப்பதற்கு வசதியாக பெட்டி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழக்குரைஞர்களின் கல்வித் தகுதியை வெளிப்படுத்தும் வகையில், சங்கத்தில் உள்ள ஆவணங்களைக் கொண்டு பட்டியல் தயாரிப்பது எனவும், தேவைப் பட்டால் வழக்குரைஞர்களிடம் கல்வித் தகுதியினை கோரிப் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முறையாக கல்லூரிக்கு செல்லாமல் சட்டப்படிப்பு படித்தோர் பற்றிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கு சங்கத்தின் துணைத் தலைவர் எம்.கமாலுதீன் தலைமையில் வழக்குரைஞர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.