வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
மாநகராட்சிப் பகுதியிலுள்ள வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை அவர்களது வீட்டிலேயே உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி, அதை ஸ்மார்ட் திருச்சி செயலி மூலம் புகைப்படமாக பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி புதன்கிழமை பதிவு செய்தவர்களில் மணி, எஸ். அட்சயா, பத்மராஜா ஆகிய மூவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயத்தையும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, ஒரு நிமிட விடியோவாகப் பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த பிரசன்ன ரமேஷ், செல்வக்குமார் ஆகியோருக்கு மின்சார கெண்டிகளையும் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் வழங்கினார்.