திருச்சி ரயில்வே குட்ஷெட் யார்டில் சனிக்கிழமை நின்றுக் கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏறி விளையாடிய பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த பழனிசாமி மகன் நந்தக்குமார்(18). இவர், திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்றுவிட்டு தனது சக மாணவர்களுடன் பாலக்கரை பெல்ஸ் டவுன் பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான குட்ஷெட் யார்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி மீது நந்தகுமார் மட்டும் ஏறி விளையாடியுள்ளார்.
அப்போது மின்சார ரயிலுக்காக அமைக்கப்பட்டிருந்த உயர்அழுத்த மின்கம்பியில் உரசிய போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருச்சி இருப்பு பாதை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.