திருச்சி மக்களவைத் தொகுதியில் வீர முத்தரையர் சங்கம் போட்டியிடுவதுடன், பெரம்பலூர் தொகுதியில் அதிமுக-வுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சி. கருப்பையா (39). வீர முத்தரையர் சங்கத்தை கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி அதன் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் முத்தரையர்கள் வசித்து வருகின்றனர்.
முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் இடம் பெற்று, நாடாளுமன்றத்தில் எங்களது சமூக குரலை ஒலிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றார் அவர்.