தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி திருச்சி கலையரங்கம் திருமண மஹாலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 23, 24) நடைபெறுகிறது.
இக்கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழக துணைவேந்தர் கமலா சங்கரன் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பெரு நிறுவன உறவுகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் துறை புல முதன்மையர் வி. பத்ரிநாத் ஆகியோர் குத்துவிளக்கேற்றுகின்றனர்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மதிப்பெண்களை தாண்டி ஓர் உலகம் எனும் தலைப்பில் சமூக கல்வி ஆர்வலர் தா. நெடுஞ்செழியன் உரையாற்றுகிறார். இக் கண்காட்சியில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. கண்காட்சிக்கு வரும் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை காணும் வகையில் அந்தந்த அரங்குகளில் உள்ள கல்வியாளர்கள் ஆலோசனைகள் வழங்குவர். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், என் வேலை, என் தேர்வு எனும் தலைப்பில் பெரு நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி மோகன்வேல் ஜெயச்சந்திரன் உரையாற்றுகிறார்.
இக் கண்காட்சிக்கு, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகம், கே. ராமகிருஷ்ணன் கல்வி குழுமங்கள், பாவேந்தர் பாரதிதாசன் கல்வி குழுமம் ஆகியவை தங்களது பங்களிப்பை அளித்துள்ளன.