இன அரசியல்-11: இந்திய ஆரியர்கள்

இன அரசியல்-11: இந்திய ஆரியர்கள்

இந்திய ஆரியர் வந்த காலம்

இந்திய ஆரியரின் முதல் இலக்கியமான ரிக் வேதத்தின்  காலம் கி. மு.1200-1000 என்று மாக்ஸ் முல்லரும் (Max Muller), கி.மு.2400-2000 என்று வின்டர்நீட்ஸும் (Winternitz), கி.மு.3000 ஆண்டிற்கு முன்னென்று சி.வி. வைத்தியாவும், கி.மு.4500-3000 என்று  ஜக்கோபியும் (Jacobi), கி.மு.6000 என்று லோகமானிய திலகரும், வெவ்வேறு கரணியமுங் கணிப்புங் கொண்டு கூறியுள்ளனர்.

 
இந்து-குஷ் மலைகள்

ஆரிய வருகைக்கு முற்பட்ட ஹரப்பா - மொகஞ்சதாரோ  (Harrappa-Mohenjodaro) நாகரிக முடிவுக்காலம், ஜான் மார்சலால் (Sri John Marshal) கி.மு.3000 என முடிவு செய்யப் பெற்றுள்ளது. அந் நாகரிகத்திற்கும் வேத ஆரியர் நாகரிக நிலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. வேத மந்திரங்களை நால்வேதமாக வகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர் காலமாகிய பாரதக் காலம் கி.மு.1000 என, இந்திய வரலாற்றாசிரியரும் ஆராய்ச்சியாளரும் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய ஆரியர் வருகைக்காலம் கி.மு.2000-1500 எனக் கொள்வது எல்லா வகையிலும் மிகப் பொருத்தமானதாகும்.

இந்திய ஆரியா்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு முதற் காரணம் என்று கருதப்படும் ஆரியரை 'இந்து ஆரியா்' என்று குறித்தல் வரலாற்று மரபு. கிரிஸ், பாரசீகம் முதலிய நாடுகளில் இருந்து வந்த ஆரியா்களும் உள்ளதால் இந்தியாவில் இந்து-குஷ் மலைகல் வழியாக புகுந்து தங்கிய ஆரியா்கள் இந்து ஆரியா்கள் எனப்பட்டனா். வேதங்களில், ஆரியர் இந்தியா மீது படையெடுத்துவந்ததாகக் குறிப்புகள் ஏதும் இல்லை என்கிறார் அறிஞர் அண்ணா.


இந்திய ஆரியர் சமூக நிலை

இந்திய ஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபோது, கிரேக்கத்திற்கு நெருங்கிய மொழியைப் பேசிக்கொண்டு ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையிலேயே இருந்தனர். பன்றி, மாடு, குதிரை முதலிய பல விலங்கிறைச்சியையும் அவர் உண்டு வந்தனர். 

ஆரிய கடவுள், மதம்

ஆரியர்களுடைய சமயம் இயற்கை வழிபாடு. பசுவை கடவுளாக கருதினா். பிற்கால ஆரியா்கள் காலத்தில் கடவுள் தன்மை ஏற்றப்பட்ட படிம வழிபாடு தோன்றியது 

இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் கதிரவன், நெருப்பு, காற்று, மழைமுகில் முதலிய இயற்கைப் பொருள்களை வணங்குவதும், வேள்வியில் சிறுதெய்வங்கட்கு விலங்குகளைக் காவுகொடுப்பதும், இறந்த முன்னோர்க்கு உரிய நாளில் பிண்டம் படைப்பதுமே அவர் மதம். முன்னோர் வரலாற்றுக் கதைகளும் சிறுதெய்வ வழுத்துகளும் செவிமரபாகவே வழங்கி வந்தன. அவருள் அறிவிற் சிறந்த பூசாரியர் (புரோகிதர்) மனமும்,  வேள்வித் தூண், சுருவம், உரல், அம்பு முதலிய உயிரிலாப் பொருள்களுடன் பேசுவதும், இயங்கும் கார்முகில்களைப் பறக்கும் மலைகளாகவும் மின்னலை அவற்றை வெட்டி வீழ்த்தும் மழைத் தெய்வத்தின் வெண் படைக்கலமாகவும் கருதுவதும், இரவு பகலையும் விடியற்காலத்தையும் தெய்வங்களாகப் போற்றுவதும் போன்ற சிறுபிள்ளைத் தன்மையளவே வளர்ச்சியடைந்திருந்தது.

ஆரியத் தெய்வங்கள்

ஆண் தெய்வங்கள்

தியசு (த்யஸ் - Dyas), பிருதுவி (ப்ருத்வீ), மித்திரன் (மித்ர), அக்கினி (அக்னி-Agni), உழை (உக்ஷஸ்), சூரியன் (சூர்ய), விண்டு (விக்ஷ்ணு), அசுவினியர் (அஸ்வின்), ஆதித்தர் (ஆதித்ய-Aditya), பரிசனியன் பர்ஜன்ய), வாயு, மருத்துக்கள் (மருத்), சோமன் (ஸோம), இரிபுக்கள் (ரிபு-Ribhus) ,விசுவகர்மன் (விச்வகர்மா) பிரசாபதி (ப்ரஜாபதி), பிருகற்பதி (ப்ருகஸ்பதி-Brihaspati),  வாச் (Vac), பூசன் (பூஷன்), அபாம் நபாத்து (அபாம் நபாத்), திரிதன் (த்ரித) ,வனற்பதி (வனஸ்பதி), திதி, சரசுவதி (ஸரஸ்வதி), பாரதி (Bharati), பிதிர்க்கள் (பித்ரு) யமன், யமி

அதிதி (Aditi), வருணன் (வருண), உருத்திரன் (ருத்ர-Rudra), இந்திரன் (இந்த்ர) துவட்டா (த்வஷ்டா) ஆகிய தெய்வங்களை தமிழ் மக்களிடமிருந்து ஆரிய மக்கள் பெற்றுக் கொண்டனர் என்கிறார் P.T. சீனிவாச ஐயங்கார்.

பெண் தெய்வங்கள்

பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண் தெய்வங்களுடன், வேறு சில ஆண் தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை.

ஆண்பால்       பெண்பால்
இந்திரன்          இந்திராணீ
வருணன்          வருணானீ
அக்கினி          அக்கினாயீ
அசுவின்          அசுவினீ

சமுதாய அமைப்பு முறையில், அவர் வெவ்வேறு கோத்திரமாகப் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு கோத்திரமும் உறவுத் தொடர்புள்ள பல குடும்பங்களையும் ஒரு தலைவனையும் ஒரு பூசாரியையும் கொண்டிருந்தது. தலைவனைப் போன்றே பூசாரியும் அவ்வச் சரவடியிற் பிறந்தவனாகவேயிருந்தான்.

இந்திய ஆரியர் படையெடுத்துப் பிற நாடுகளைக் கைப்பற்றுமளவு பெருந்தொகையினராய் வரவுமில்லை. அவருக்குள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நாற்பாற் பகுப்புமில்லை. இப் பகுப்பெல்லாம் பிற்காலத்தில் வடஇந்தியத் தென்னிந்தியத் தமிழரொடும் தொடர்புகொண்ட பின்பு, ஆரியப் பூசாரியரான பிராமணர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பொருளிலக்கணப் பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்க்குள் வகுத்தமைத்தவையே. ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவில் குடியிருந்தவர் பெரும்பாலும் தமிழரே. 

ஆரியர் வருமுன்பே, தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கு மேற்ற பல துறைகளிலும் உயர்நாகரிக மடைந்திருந்தனர். தமிழர் கண்ட கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டும். விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலையறிஞர் இதையறியாது இந்திய நாகரிகம் முழுவதும் ஆரியரிடையதென மயங்கிவிட்டனர் என்கிறார் தேவநேயப் பாவணர்.

ஆரியர்கள் இந்திய வருகை மரபியல் ரீதியாக நடைபெற்ற ஆய்வுகள்

M.J பாம்ஷட்டின் ஆய்வு

2001 ஆம் ஆண்டு, M.J பாம்ஷட்( M.J BAMSHAD) மற்றும் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் (Dr.SPENCER WELLS Director of the Genographic Project) ஆகிய மரபணு அறிஞர்கள் தலைமையிலான அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குழு, ஆரியர்களின் பூர்வீகத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குழுவில் TOOMAS KIVISILD என்பவரும் ஒருவர். இவர் தான் 1999 இல் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு ஆரிய படையெடுப்பு பொய் என்று வாதிட்டவர். இவர் நடத்திய மரபணு சோதனைகளில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி GENOTYPE களை மட்டும் வைத்து ஆய்வு செய்திருந்தார். PATERNAM GENETIC எனப்படும் தந்தைவழி ஜீன்களை ஏனோ அப்பொழுது கருத்தில் அவர் கொள்ளவில்லை. அதன் பிறகு நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில் TOOMAS KIVISILD உள்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து முடிவுகளை அறிவித்தனர்.

இந்த மரபணு சோதனையில் MATERNAL GENETIC எனப்படும் தாய்வழி மரபுரிமைக்கு மட்டும் பயன்படும் MITOCHONDRIAL DNA எனப்படும் DNAவை வைத்து FEMALE INHERITANCE எனப்படும் பெண்களின் தலைமுறை பற்றியும், ஆண்களை நிர்ணயிக்கும் Y-CHROMOSOME எனப்படும் DNAவை வைத்து ஆண்களின் தலைமுறை MALE INHERITANCE பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. Y-CHROMOSOME இன் NON-RECOMBINING பகுதிகள் மூலமாக M17 என்ற GENETIC MARKER-ஐ வைத்து இந்தியாவினுள் ஆரியர் நுழைந்ததை உறுதி செய்தனர். M17 என்பது ஆரியர்களின் மரபணு அடையாளக் குறியாகும். 

"இந்திய ஆரியர்கள், மரபணு ரீதியாக WEST EURESIA என அழைக்கப்படக்கூடிய பகுதியை சேர்ந்தவர்களை (ஈரான் இந்த பகுதியில் தான் உள்ளது) ஒத்து உள்ளனர். தமிழர்கள் (திராவிடர்கள்) மரபணு ரிதியாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களை ஒத்து உள்ளனர். 

2003 இல், QUINTANA-MURCI என்ற மற்றொரு மரபியல் அறிஞரும், இதே போல, ஆடுமாடுகளை மேய்த்த நாடோடி இடையர்கள், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்ததை குறிப்பிட்டுள்ளார். 

டேவிட் ரீச்சின் ஆய்வுகள்

டேவிட் ரீச் (David Reich) என்ற மரபியலர் டிஎன்ஏ அடிப்படையில் இந்தியாவில் ஆரியர்களின் வருகை என்பது நிச்சயம் நடந்த ஒன்று என்று மெய்ப்பிக்கும் கருத்தை “Who We Are and How We Got Here” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதில் தந்தைவழியில் கடத்தப்படும் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து ஆரியர்களின் வருகை என்பது இந்தியாவிற்கு வெளியில் இருந்துதான் நிச்சயம் நிகழ்ந்தது என்பதை நிறுவியிருக்கின்றார். இதுநாள்வரை பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் சரியான முடிவை எட்ட முடியவில்லை அதற்குக் காரணம் ஆரியர்களில் ஆண்களே பெரும் அளவில் புலம் பெயர்ந்து வெண்கல யுகத்தில் (Bronze Age migrations) வந்ததே காரணம் ஆகும். தற்போதைய ஆய்வுகள் தந்தைவழி குரோமோசோம்களான Y யின் அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதால் ஆரியர்களின் வருகைப்பற்றிய அடிப்படையான ஆதார உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் Y டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% சதவீத இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, அய்ரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கின்றார்கள்.

ஹட்டர்ஸ் ஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் (Prof. Martin P. Richards) தலைமையில் 16 விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை “A Genetic Chronology for the Indian Subcontinent Points to Heavily Sex-biased Dispersals; இல் ஆரியர்களில் ஆண்களே பெரும் அளவில் புலம் பெயர்ந்துள்ளனர் (male-driven) என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

பீட்டர் அண்டர்ஹில் மற்றும் டேவிட் போஸ்னிக் ஆய்வுகள்

வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது என்கின்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ். ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று Z282, Z93. இதில் Z282 அய்ரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்துசென்றனர். Z93 என்ற பிரிவினர் மத்திய ஆசியாவிற்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும் Z93ந் மூன்று துணை பிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்  இமாலய பகுதியில் பரவினர். இதற்கு முந்திய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு முடிவுகள் தகர்த்திருக்கின்றது என்கின்றார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.

ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மரபியல் துறை விஞ்ஞானி பீட்டர் அண்டர்ஹில்லுடன் (Peter Underhill) இணைந்து டேவிட் போஸ்னிக் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட  ஒரு ஆய்வு முடிவில் Z93 பிரிவினர் பரவல் 4000 லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினர் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கின்றார் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வு முடிவுகள் ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கோட்பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை சேர்த்து இருக்கின்றன. 


பாசு (Basu et al) என்ற ஜீனோம் அறிஞர் பல ஜீனோமிக் ஆய்வு முடிவுகளை முன் வைக்கிறார்;

1. இந்திய ஆரிய பெண்களுடைய மரபு வழியில், அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளது. இது ஆரம்பத்தில் இந்தியாவிற்கு வந்த பெண்கள் குறைவு என்பதையே காட்டுகிறது.
2. பழங்குடி இனத்தவருக்கும் மற்றும் ஜாதிவாரி மக்களுக்கும் இடையே மிக பெரிய வேற்றுமை உள்ளது.
3. Austro-Asiatic எனப்படும் பழங்குடியினர் இந்தியாவில் குடியேறிய முதல் பழங்குடியினர் ஆவர்.
4. இந்தோ ஐரோப்பிய நாடோடி கூட்டங்கள் வருவதற்கு முன்னரே திராவிட பழங்குடியினர் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கி இருந்தனர்.
5. உயர்ஜாதி மக்கள் மரபியல் தொடர்புகள் மத்திய ஆசிய மக்களை ஒத்து உள்ளது.
கோர்டாக்ஸ் என்ற மரபியல் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இந்திய ஜாதி அமைப்புகளில் உள்ள தந்தைவழி மரபுவளிகள் 3500 வருடங்களுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆரியர்களை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.
 

கலப்பற்ற ஆரியர் உளரா ?

ஆரியர் எனும் மக்கள், சென்ற இடங்களில் வாழ்ந்த மக்களோடு தாராளமாகக் கலந்து கொண்டார்கள், இன்று இவ்வுலகத்திலேயே கலப்பற்ற ஆரியர் இலர். இந்திய நாட்டிலே காஷ்மீரில் அதிகக் கலப்பற்ற ஆரியர் வாழ்கிறார்கள் என்று கருதப்படுகின்றது. இன்று மக்கள் தம்மை ஆரியர் என்று குறிப்பாக தென்னிந்தியர் அவ்வாறு கூறிக்கொள்வது வியப்புகுரியது என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை.

ஆரியரின் உணவு

வேதகால ஆரியர் இறைச்சி வகைகளத் தாராளமாக புசித்தார்கள். வெள்ளாடு, செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களில் கொல்லப்பட்டன. முக்கிய விருந்து வந்தால் பெரிய மாடு அல்லது ஆட்டைக் கொல்லும் படி சதபத பிராமணங் கூறுகிறது. சதபத பிராமணம்-III 1.1.21-இல் யாக் ஞவல்கியர் கூறுவது: பசு, காளை ஊன் மெதுவாக இருந்தால் உண்பேன் என்பதாகும். இந்திரனுக்கு எருதுகள் பலியிடப்பட்டன. சோமக்கொடிச் சாற்றினின்று உருவாக்கிய மதுவையுண்டு. களிப்பதும் அதைத் தெய்வமாகப் புகழ்ந்து பாடுவதும் அவர் வழக்கம். அம் மதுவை வழிபட்ட தெய்வங்கட்கும் படைத்தனர்.

ஆரியர்களின் எழுத்தறிவு

ஆரியருக்கு எழுத்துமில்லை; இலக்கியமுமில்லை என்கிறார் பாவாணர். ஆரியர்கள் எழுத்துக் கலையை முதல் முதல் கற்றது நாகர்களிடமிருந்து என்கிறார் கா.அப்பாதுரையார். மேலும், இந்திய பூர்வீக நாகர்களே ஆரியருக்கு சமஸ்கிருத மொழியை கற்பித்தனர் என்கிறார் டாக்டர் கிளீட் விண்டர்ஸ் (DR. CLYDE WINTERS)

References:

  • வடமொழி வரலாறு – 1 ஞா.தேவநேய பாவாணர் 1967    
  • ஆரிய வேதம் ந.சி.கந்தையா பிள்ளை.
  • ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்_ கா.அப்பாதுரையார்
  • ஆரிய மாடை அறிஞர் அண்ணா
  • Ancient African Kings Of India By Dr. Clyde Winters
  • The age of the Mantras by P.T.Srinivasa Iyenkar
  • A Genetic Chronology for the Indian Subcontinent Points to Heavily Sex-biased Dispersals
  • Genetic evidence on the origins of Indian caste populations by Bamshad M
  • The Journey of Man: A Genetic Odyssey by Spencer Wells,2002

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com