தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.) இரண்டாவது காலாண்டில் ரூ.6.52 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.1005.70 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இது ரூ.537.94 கோடியாக காணப்பட்டது.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.13.20 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே கால அளவில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.6.52 கோடியை ஈட்டியுள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,130.38 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,931.01 கோடியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூ.102.35 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.31.20 கோடியைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் காகித உற்பத்தி 87,164 டன்னிலிருந்து 1,06,749 டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, காகித அட்டையின் உற்பத்தியும் 28,659 டன்னிலிருந்து 47,487 டன்னாக உயர்ந்துள்ளது என டி.என்.பி.எல். செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.