இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதத்தில் 17.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் 2,698 கோடி டாலராக (ரூ.1.89 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடும்போது இது 17.86 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதியைப் போலவே நாட்டின் இறக்குமதியும் அம்மாதத்தில் 17.62 சதவீதம் உயர்ந்து 4,411 கோடி டாலரை (ரூ.3.08 லட்சம் கோடி) எட்டியது. இறக்குமதி கணிசமாக அதிகரித்ததையடுத்து வர்த்தக பற்றாக்குறையானது 1,713 கோடி டாலராகியுள்ளது.
குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 42.9 சதவீதம் சரிவடைந்து 168 கோடி டாலராக காணப்பட்ட நிலையிலும் வர்த்தக பற்றாக்குறையானது இந்த அளவுக்கு உயர்ந்தது கவனிக்கத்தக்கதாக உள்ளது. அக்டோபரில் வர்த்தக இடைவெளி 1,461 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 13.27 சதவீதம் வளர்ச்சி கண்டு 19,100 கோடி டாலராக இருந்தது. இறக்குமதியும் 16.37 சதவீதம் அதிகரித்து 30,247 கோடி டாலராக காணப்பட்டது. நடப்பு 2018-19 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 11,146 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் 9,128 கோடி டாலராக காணப்பட்டது.
எண்ணெய் இறக்குமதி அக்டோபரில் 52.64 சதவீதம் உயர்ந்து 1,421 கோடி டாலரை எட்டியது. எண்ணெய் சாரா பொருள்கள் இறக்குமதி 6 சதவீதம் அதிகரித்து 2,990 கோடி டாலராக இருந்தது.
செப்டம்பரில் ஏற்றுமதியானது 2.15 சதவீதம் பின்னடைந்திருந்ததாக வர்த்தக அமைச்சகம் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.