கடனில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவது குறித்து டாடா சன்ஸ் வெள்ளிக்கிழமை (நவ.16) முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுக்கு உள்ளாகியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் போயிங் 777 விமானங்களை விற்பனை செய்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாகி அமித் அகர்வால் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், ஜெட் ஏர்வேஸை வாங்குவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்டாரா, மலேசியாவின் ஏர் ஏசியாவுடன் இணைந்து ஏர்ஏசியா இந்தியா ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களை ஏற்கெனவே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணிகளிலும் டாடா சன்ஸ் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.