கடந்த வார இறுதியில் நடைபெற்ற வர்த்தகத்தில் சந்தை மூலதன மதிப்பில் மாருதி சுஸுகியை, கோட்டக் மஹிந்திரா வங்கி பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி அதிக சந்தை மூலதனத்தைக் கொண்ட 10 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், இந்திய வங்கி பிரிவில் அதிக சந்தை மூலதன மதிப்பைக் கொண்டதாக கருதப்படும், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய மூன்று வங்கிகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை கோட்டக் மஹிந்திரா வங்கி பிடித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் சந்தை மூலதனம் ரூ.2,22,656.33 கோடியாக அதிகரித்தது. அதேசமயம், மாருதி சுஸுகி இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.2,21,486.61 கோடியாக காணப்பட்டது.
பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.7,14,668.54 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டு மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ரூ.7,06,292.61 கோடி சந்தை மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.