அந்நிய செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வடைந்தது.
அண்மைக் காலமாக ரூபாய் மதிப்பு சரிந்து வந்த நிலையில், கடந்த ஐந்து தினங்களாக தொடர்ச்சியாக அதன் மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு, டாலர் வரத்து ஸ்திரத்தன்மை அடைந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதற்கு உதாரணமாக, மூலதன சந்தையில் திங்கள்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.1,100 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து 71.67-ஆனது. கடந்த நவம்பர் 13-ஆம் தேதியிலிருந்து ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை பெற்று வருகிறது. அந்த வகையில், ஐந்து தினங்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு 1.68 சதவீதம் அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. இது, கடந்த பத்து வாரங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.