இந்தியாவில் 5ஜி சோதனையை அடுத்தாண்டு முதல் காலாண்டில் மேற்கொள்ளவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: தற்போது தொலைத் தொடர்பு துறையுடன் மிகவும் நெருக்கமான முறையில் இணைந்து சாம்சங் செயலாற்றி வருகிறது. அந்த வகையில், வரும் 2019-இல் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையானது புது தில்லியில் மேற்கொள்ளப்படும். பல்வேறு படி நிலைகளில் இந்த சோதனை நடத்திப் பார்க்கப்பட உள்ளது. எனவே, இதற்கு நீண்ட காலம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதற்கான பணிகளில் சாம்சங் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் பயனடைவதை தவிர, சுகாதார பராமரிப்பு, வேளாண் துறை, சிறிய நகரங்கள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் மிக அதிக அளவில் பயன் தரக்கூடியது என சாம்சங் கூறியுள்ளது.