வரும் 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த ஜப்பானின் முன்னணி வாகன நிறுவனமான சுஸுகி தீவிரமாகத் திட்டமிட்டிருக்கிறது என்று அதன் தலைவர் ஒசாமு சுஸுகி கூறுகிறார்.
ஐம்பது கார்களைக் கொண்டு இதற்கான சோதனை ஓட்டத்தை வரும் அக்டோபர் மாதம் தொடங்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இந்திய சாலைப் போக்குவரத்தின் தன்மை, தட்ப வெப்பம், ஓட்டுநர் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து அறிய இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறதாம். மின்சார கார்களுக்குத் தேவையான லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஏற்கெனவே சுஸுகி களத்தில் இறங்கிவிட்டது. வரும் 2020-ஆம் ஆண்டு சுஸுகி மின்சார கார்கள் இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கும்போது, அந்த கார்கள் மட்டுமல்லாமல், அவற்றுக்குத் தேவையான பேட்டரிகளையும் குஜராத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று பெருமிதத்துடன் ஒசாமு சுஸுகி கூறுகிறார்.
"வரும் 2030-ஆம் ஆண்டு அளவில், இந்தியாவில் உள்ள கார்களில் 30 சதவீத அளவு மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்கும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், படிப்படியாக அவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். எங்களைப் பொருத்தவரையில், மின்சாரத்தால் இயங்கும் கார்கள் மட்டுமல்லாமல், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களுக்கும் முக்கியத்துவம் தருவோம். எங்களது முயற்சிக்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்' என்கிறார் அவர்.
சுஸுகியை தொடர்ந்து, டொயோட்டா, ஹுண்டாய் நிறுவனங்களும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை இந்திய சந்தையில் இறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.