இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி நடப்பாண்டில் 5 சதவீதம் வளர்ச்சி காணும் என இக்ரா மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இக்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2012-ஆம் ஆண்டில் இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி 1.02 லட்சம் டன்னாக இருந்தது. அப்போது நமது சந்தைப் பங்களிப்பு 28 சதவீதமாகவும், வியட்நாமின் பங்களிப்பு 58 சதவீதமாகவும் காணப்பட்டது. இருப்பினும், அதிலிருந்து 2012 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கிடையில் முந்திரி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு சரிவடையத் தொடங்கியது. ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் சரிவைக் கண்டது.
அதேசமயம், இதே காலத்தில் வியட்நாமின் ஏற்றுமதி ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது.
இந்த நிலையில், கடந்த 2017-இல் இந்தியா 88,000 டன் முந்திரியை ஏற்றுமதி செய்து உலக அளவில் 19 சதவீத பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், வியட்நாம் 74 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்கி முன்னிலை வகித்தது.
உற்பத்தி செலவினம் குறைவு, பணியாளர்களுக்கான ஊதியம் குறைவு போன்ற காரணங்களால் உலக சந்தையில் முந்திரி ஏற்றுமதியில் வியட்நாம் கடுமையான போட்டி நாடாக விளங்கியது.
இந்த நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் முந்திரிக்கான தேவை தொடர்ந்து சூடுபிடித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பாண்டில் முந்திரி ஏற்றுமதி 5 சதவீதமும், உள்நாட்டு நுகர்வு 6-8 சதவீதமும் வளர்ச்சி காணும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.