நாட்டின் உணவு தானிய உற்பத்தி 2018-19-ஆம் பயிர் பருவத்தில் 28.52 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் இணை அமைச்சர் பர்ஸ்ஹோட்டம் ரூபாலா கருத்தரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த 2017-18-ஆம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) உணவு தானிய உற்பத்தியானது 28.48 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2018-19-ஆம் பயிர் பருவத்தில் 28.52 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரத்தின்படி, ஜூன் மாதத்தில் தொடங்கிய தற்போதைய பருவமழைப் பொழிவானது வழக்கத்தை விட 9 சதவீதம் குறைவாகவே உள்ளது. பருவமழைக்கு பற்றாக்குறை நிலவிய போதிலும், இந்த சாதனை இலக்கு நிச்சயம் எட்டப்படும். இதற்கு, கரீப் பருவ சாகுபடி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே முக்கிய காரணம்.
கடந்த ஆண்டில் நெல் உற்பத்தி 11.29 கோடி டன்னாக இருந்த நிலையில், 2018-19 பயிர் பருவத்தில் இதனை 11.3 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தியை 9.97 கோடி டன்னிலிருந்து 10 கோடி டன்னாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், 4.67 கோடி டன் முக்கிய தானியங்களையும், 2.5 கோடி டன் பருப்பு வகைகளையும் உற்பத்தி செய்வதை அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இதுதவிர, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை 3.13 கோடி டன்னிலிருந்து 3.6 கோடி டன்னாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.