தனியாக காப்பீட்டு நிறுவனத்தை தொடங்குவதற்கான ஆலோசனைகளைப் பெறும் வகையில் ஆலோசனை (கன்சல்டன்ஸி) நிறுவனத்தின் உதவியை இந்தியா போஸ்ட் கோரியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:
காப்பீட்டுத் துறையில் களமிறங்க இந்தியா போஸ்ட் ஆயத்தமாகி வருகிறது.
அதற்கான ஆலோசனைகளைப் பெறும் வகையில் கன்சல்டன்ஸி நிறுவனத்தை நியமனம் செய்யும் நடவடிக்கைளில் இந்தியா போஸ்ட் ஈடுபட்டுள்ளது.
அதற்காக, இந்தியா போஸ்ட் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது தொடர்பான முன் ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.18) நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனை நிறுவனங்கள், போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸை அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள், வர்த்தக வியூகங்கள், தாக்கத்தின் மதிப்பீடு, அஞ்சல் துறையுடன் இணைந்து அரசின் தன்னிச்சையான நிறுவனமாக மாறுவதற்கு உண்டான யோசனைகள், அவற்றின் செயாலக்கத்திற்கான மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றித் தருவதாக இருக்க வேண்டும்.
எனவே இந்தப் போட்டியில் தற்போதைய நிலையில், போஸ்டன் கன்சல்டிங் குரூப், பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ், எர்னஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி, டெலாய்ட் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.