சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது மத்திய அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் என்பதுடன் கடன் வாங்குவதையும் குறைக்கும் என ஆய்வு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு, என்எஸ்சி, பிபிஎஃப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 0.4 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி வட்டி விகிதங்களை காட்டிலும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் பொதுமக்களிடம் இத்தகைய திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் நிதி கணிசமான அளவில் உயரும். நடப்பு நிதியாண்டில் சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்டும் மத்திய அரசு இலக்குடன் ஒப்பிடும்போது அது அதிகமாகவே இருக்கும்.
இது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் மத்திய அரசு சந்தையிலிருந்து கடன் திரட்டும் அளவை குறைக்க உதவும் என்று அந்த அறிக்கையில் இக்ரா தெரிவித்துள்ளது.