பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் கடந்த நிதியாண்டில் 13 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்கள் ஈட்டிய ஒட்டுமொத்த பிரீமியம் வருவாய் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.1.70 லட்சம் கோடியாக இருந்தது. இது, 2017-18 நிதியாண்டில் ஈட்டிய பிரீமியம் வருவாய் ரூ.1.51 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.
மொத்தமுள்ள 34 நிறுவனங்களில், 7 முற்றிலும் தனியார் நிறுவனங்களுக்கும்; 2 நிறுவனங்கள் மத்திய அரசுக்கும் சொந்தமானவை. இவை தவிர்த்து எஞ்சியுள்ள 25 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் 2018-19 இல் 1.50 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் பிரீமியம் வசூலான ரூ.1.33 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகம்.
அதேசமயம், தனியார் துறைக்கு முற்றிலும் சொந்தமான 7 நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ரூ.8,314.27 கோடியிலிருந்து 37 சதவீதம் அதிகரித்து ரூ.11,368.82 கோடியானது.
இருப்பினும், மத்திய அரசுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களான, வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இசிஜிசி நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ரூ.9,133.78 கோடியிலிருந்து 7.75 சதவீதம் சரிவடைந்து ரூ. ரூ.8,425.75 கோடியானது என புள்ளிவிவரத்தில் இரிடா தெரிவித்துள்ளது.