பொதுத் துறையைச் சேர்ந்த அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடியை அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் மூலதனமாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து அலாகாபாத் வங்கி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபிக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அலாகாபாத் வங்கியில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.3,000 கோடியாக இருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் மூலதனத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதையடுத்து, வங்கிக்கு ரூ.5,000 கோடியை அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக மத்திய அரசு அளித்துள்ளது. இதையடுத்து, வங்கியில் மத்திய அரசின் மூலதனம் ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.8,000 கோடியாக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கையில் அலகாபாத் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் உயர்த்தப்பட்டதன் விளைவாக, அலகாபாத் வங்கி மேலும் நிதி திரட்டிக் கொள்ளும் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.8,000 கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.