ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வரும் வாரங்களில் மேலும் குறையும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிசிஏ செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
ஜெட் ஏர்வேஸின் செயல்திறன், பறக்கும்தகுதி மற்றும் பயணிகளின் வசதி குறித்து டிஜிசிஏ ஆராய்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்நிறுவனம் 41 விமானங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது. அதன் மூலம், அட்டவணையின்படி 603 உள்நாட்டு விமானச் சேவையையும், 382 சர்வதேச விமானச் சேவையையும் அது வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலையடுத்து, வரும் வாரங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் சரிவடைய அதிக வாய்ப்புள்ளது.
அனைத்து நிலவரங்களும் உன்னிப்புடன் தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் நிலையில், உரிய நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.