ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள 2 இடங்களில் பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பூஞ்ச் பகுதியில் 2 இடங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் சிறிய ரக துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகளால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சுட்டனர். பிறகு, சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு இருதரப்புக்கும் சண்டை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
பூஞ்ச் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் படையினர் கடைசியாக தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து எந்த தாக்குதலும் இல்லாததால், கடந்த 4 மாதமாக அமைதி நிலவியது.