புது தில்லி: காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின்போது, ராணுவ வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பாராட்டு தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகில இந்திய வானொலியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய அவர், இதுகுறித்து கூறியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் கடுமையாக இருந்தபோதிலும், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் ராணுவ வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.
அதேபோல், பதான்கோட் விமான தளத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை வலிமையோடு எதிர்கொண்டு நமது வீரர்கள் முறியடித்தனர். மேலும், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி நடத்தப்படும் தாக்குதல்களையும், இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளையும் அவர்கள் முறியடித்து வருகின்றனர்.
நமது எல்லைப் பகுதிகளை அனைத்து விதங்களிலும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். அதனால், குறைந்த காலகெடுக்குள் தயாராகும் வகையில், நமது படைகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும், நமது போரிடும் முறைகளையும், கருவிகளையும் எப்போதும் மேம்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றார் மனோகர் பாரிக்கர்.