தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக்கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் சார்பில் பிரிட்டனைச் சேர்ந்த சட்ட அமைப்பான டிஎல்டி எல்எல்பி அமைப்பு, நார்தாம்ப்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுத்தது. இந்த வழக்கு லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது, லண்டன் உயர்நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிடப்பட்டுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. ஜாவீதின் ஒப்புதல் கிடைத்ததும், இந்தியாவுக்கு மல்லையா நாடு கடத்தப்படுவார்.