சுட்டுரை (டுவிட்டர்) தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜாக் டோர்ஸி ராகுலிடம் விளக்கமளித்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, ""உலகம் முழுவதும் விவாத நிலைகளில் மிகவும் மேலாதிக்கம் கொண்டதாக வளர்ந்து நிற்பது சுட்டுரை தான்.
சுட்டுரைகளில் நடைபெறும் விவாதம் என்பது ஆரோக்கியமானதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தவறான, போலியான செய்திகளை பரப்புவதாக இருக்கக் கூடாது.
போலியான செய்திகள் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஜாக் டோர்ஸியுடன் நடத்திய விவாதம் பயனுள்ளதாக இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாக் டோர்ஸியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது சுட்டுரையின் பக்கத்தில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.