சபரிமலை விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேவேளையில், அந்த மனுக்கள் ஜனவரி 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த சில தினங்களில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
இந்தச் சூழலில், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.