மறைப்பதற்கு நிறைய வைத்திருப்பவர்கள் தான் சிபிஐ கண்டு அஞ்சுவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அமைப்பு தனது அதிகாரத்தை செயல்படுவதற்காக வழங்கியிருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசுகள் திரும்பப் பெற்றுள்ளது. எனவே, இனிமேல் ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தால் மாநில அரசிடம் முன்னதாக உரிய அனுமதி பெற்றாக வேண்டும்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"மறைப்பதற்கு யார் நிறைய வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் தங்கள் மாநிலத்துக்கு சிபிஐ வராமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுப்பர். ஆந்திராவின் நகர்வு குறிப்பிட்ட ஒரு வழக்கின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்று தெரிகிறது. ஆனால், நடக்க இருப்பதன் பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இது தொடர்பாக நான் மேற்கொண்டு எதுவும் கூறமாட்டேன்.
இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு உள்ளது. தொடக்கத்தில் சிபிஐ மத்திய அரசின் ஊழியர்களுக்காக கூட்டாட்சி அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு மாநிலங்களில் உள்ள அதிதீவிரமான வழக்குகளை விசாரிக்க பயன்படுத்தப்பட்டது. இதை நீதிமன்றம் அல்லது மாநிலங்கள் பரிந்துரை செய்யவேண்டும்" என்றார்.