பீமா கோரேகான் வழக்கு: மகாராஷ்டிர அரசின் மனு மீதான விசாரணை டிச.3-க்கு ஒத்திவைப்பு

பீமா கோரேகான் கலவர வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


பீமா கோரேகான் கலவர வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பீமா கோரேகான் கலவரம் தொடர்பான வழக்கில், வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்ட ஐவரை மகாராஷ்டிர காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறையினருக்குக் கூடுதலாக 90 நாள்கள் அவகாசம் அளித்து புணே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், காவல் துறையினருக்கு கூடுதல் அவகாசம் வழங்கியிருப்பது சட்டவிரோதமானது என்று கூறி புணே நீதிமன்றத்தின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com