உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்புகளுக்கு ராணுவ ரகசியங்களை அளித்ததாக, இந்திய ராணுவ வீரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லக்னெள நகரில் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை கூறியதாவது: மீரட் நகரில் உள்ள படைப் பிரிவைச் சேர்ந்த அந்த ராணுவ வீரர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு பணியில் உள்ளார்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் உளவு அமைப்புகளுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் ரகசியத் தகவல்களை அளித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
அதனடிப்படையில், அவரிடம் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதே போன்றதொரு குற்றச்சாட்டில், நிஷாந்த் அகர்வால் என்ற பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளர், நாகபுரியில் இந்த மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு படையினர் அவரைக் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் இருந்து பெண்களின் பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்த அந்நாட்டு உளவு அமைப்பினருடன் நிஷாத் அகர்வால் தொடர்பு வைத்திருந்ததாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறினர்.