சபரிமலை கோயிலை பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு இன்று காலை ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்கதர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார், இரு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று இரண்டு பெண்களும் நடைப்பந்தலில் இருந்து பலத்து பாதுகாப்புடன் பம்பை திரும்பிச் செல்கின்றனர். 2 பெண்களும் திரும்பியதை அடுத்து சபரிமலையில் நிலவிய பதற்றம் தணிகிறது.
இதனிடையே சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 3ஆம் நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபரிமலை தலைமை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சபரிமலை கோயிலை பூட்டி, சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பிச்செல்ல முடிவு செய்துள்ளோம். பக்தர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன், எனக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.