கொச்சி: சபரிமலை அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் பொதுவானது என்று கேரள உயர் நீதிமன்றத்தின் தேவசம் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் வழிபாடு செய்வது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக கேரள அரசியலில் சூடு பறக்கிறது. இந்நிலையில் இந்து மத செயல்பாட்டாளாரும் பாஜக ஆதரவாளருமான மோகன் தாஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தேவசம் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மட்டுமே வழிபாடு செய்வதற்கான உரிமையுள்ளது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் இதனை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சபரிமலை என்பது ஹிந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் வந்து வழிபாடு செய்யும் இடம் அல்ல. அனைத்து மத நமபிக்கை கொண்டவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்வது என்பது நடைமுறையாக இருக்கிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இருமுடி என்னும் புனிதப்பொருட்கள் அடங்கிய பையை தலையில் சுமந்து வர வேண்டிய அவசியம் இல்லை. கருவறைக்குச் செல்லும் 18 படிகள் ஏற விரும்புபவர்கள் மட்டும்தான் இருமுடி சுமந்து வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு கேரள அரசுக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டுக்கும் உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.