நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 22 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேசிய சட்ட தகவல் சேமிப்பு அமைப்பில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில், கடந்த 17ஆம் தேதி நிலவரப்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக 22.90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 5.97 லட்சம் வழக்குகள், சிவில் விவகாரம் தொடர்பானவை. 16.92 லட்சம் வழக்குகள், கிரிமினல் விவகாரம் தொடர்பானவை ஆகும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 2.50 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை கணக்கில் கொண்டு பார்த்தால், கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை 8.29 சதவீதம் ஆகும் என்று அந்த புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த தகவலை தருவதற்காக தேசிய சட்ட தகவல் சேமிப்பு அமைப்பை உச்ச நீதிமன்றத்தின் மின்னணு குழு தொடங்கியுள்ளது. இந்த அமைப்பானது, நிலுவையில் இருக்கும் வழக்குகளை அடையாளம் காண்பது, அந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
நாடு முழுவதும் மின்னணு நீதிமன்றங்களை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, தேசிய சட்ட தகவல் சேமிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி 24 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதேபோல், மத்திய சட்ட அமைச்சகமும், கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராயும்படி உயர் நீதிமன்றங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.