கிர் வனப்பகுதியில் அடுத்தடுத்து 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கிர் வனப்பகுதியில் ஏராளமான ஆசிய சிங்கங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சிலதினங்களில் மட்டும் சந்தேகத்திற்கு இடமான வகையில் 11 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இது வனத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டையிட்டும், நுரையீரல் சார்ந்த நோய் தொற்றினாலும் இந்த சிங்கங்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இறந்த சிங்கங்களின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்து விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
ஆய்வின் முடிவிலே சிங்கங்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.