முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
இச்சட்டப்படி முத்தலாக் முறையில் உடனடியாக விவாகரத்து செய்வது சட்டப்படி செல்லாதது மட்டுமின்றி சட்டவிரோதமானதுமாகும்.
இதனை மீறி முத்தலாக் முறையில் உடனடியாக மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். எனினும், இந்த சட்டத்தில் ஜாமீன் பெறும் பிரிவு கடந்த மாதம் சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த ஜம்'எய்யாத் உல்- உலாமா எனும் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே, இந்த அவசர சட்டத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, முத்தலாக் விவாகரத்து முறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முத்தலாக் முறையை தடை செய்யும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறிவிட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.