புது தில்லி: மோடிக்கு ஆதரவாக மஹாராஷ்ட்ர மாநில தொலைக்காட்சித் தொடர்களில் பிரசாரம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விதிமீறல் குறித்து இரு தரப்பிலும் புகார்கள் மாறி மாறி கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக மஹாராஷ்ட்ர மாநில தொலைக்காட்சித் தொடர்களில் பிரசாரம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
மஹாராஷ்ட்ர மாநிலத் தொலைக்காட்சிகளில் வெளியாகும் பிரபலமான மூன்று தொலைகாட்சித் தொடர்களில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரித்து காட்சிகளும் வசனங்களும் இடம்பெறுகின்றது என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
மஹாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சச்சின் சாவந்த், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் கூறியிருந்தார். அத்துடன் குறிப்பிட்ட ஒரு தொடரின் விடியோ காட்சியையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். அதேபதிவில் இந்த விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இதுதொடர்பாக பாஜக மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், மூன்று தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் திங்களன்று புகார் தெரிவித்துள்ளது.