கர்நாடகத்தில் மீண்டும் முதல்வராவதாக சித்தராமையா கூறியிருப்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா? என்று பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
சிவமொக்காவில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் தான் மீண்டும் முதல்வராகப் போவதாக சித்தராமையா கூறியிருக்கிறார். சித்தராமையா தனக்கு தானே முதல்வர் வேட்பாளராக அறிவித்துகொண்டிருக்கிறார். இந்த முடிவை காங்கிரஸ் ஏற்கிறதா? காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், ஜி.பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே போன்றோர் சித்தராமையாவை மீண்டும் முதல்வராக ஒப்புக் கொண்டால், ஏற்றுக்கொள்ளலாம்.
இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று சித்தராமையா கூறியிருந்தார். அப்படியானால், அவரால் எப்படி மீண்டும் முதல்வராக முடியும்? சிவமொக்கா மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பி.ஒய்.ராகவேந்திரா, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 10 அல்லது 11 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.
காங்கிரஸ்மஜத கட்சிகளுக்கு இடையே உள்கட்சிப் பூசல் இருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றார் ஈஸ்வரப்பா.