புனே: மோடி அரசியலிலிருந்து விலகி விட்டால், நானும் விலகி விடுவேன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி. இவர் திங்களன்று மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
சிறந்த தலைவர்களுடன் நான் அரசியலில் பணியாற்றி வருகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையின் கீழ் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஒருவேளை பிரதமர் மோடி அரசியலை விட்டு ஓய்வு பெறும் போது, நானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன்.
நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேனா என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது குறித்து கட்சித்தலைவர் அமித்ஷா தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.