தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரணைக்கு ஏற்ப குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வி. கிரி ஆஜராகி, இந்த விவகாரத்தில் சிபிஐ எவ்வாறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை விரிவாக விளக்கினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அதிகாரிகள் தொடர்பாக எந்த மாதிரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை நீக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரச்னைகள் அடிப்படையில் மட்டும் சிபிஐ செயல்படக்கூடாது. இந்த விவகாரத்தில் முழுமையாக ஆராய்ந்து, விசாரணைக்கு ஏற்ப குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.