இந்திய முத்திரைத்தாள் சட்டம் - 1988-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி மசோதாவுடன் சேர்ந்து இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் மாநில அரசுகள், பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலித்து கொள்ள முடியும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக தடுக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரம் அதிகரிப்பதுடன், பங்கு சந்தை வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் எளிதாக மேற்கொள்ள முடியும். இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்துதான் பங்கு வர்த்தகம் தொடர்பான முத்திரைத்தாள் கட்டணம் 70 சதவீதம் அளவுக்கு வசூலாகிறது.
இப்போது, பங்கு சந்தை வர்த்தகத்தில் வாங்குவோர் மற்றும் விற்போர் என இருதரப்பினரும் இந்த முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இனி யாராவது ஒரு தரப்பினர் மட்டும் செலுத்தினால் போதுமானது.