திருமலையில் பல முக்கிய பகுதிகளில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருமலையில் உணவு விடுதிகளும், தங்கும் அறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம், விரைவு தரிசனம் என தனித்தனியாக தரிசன நுழைவு வாயில் உள்ளது.
இதனால், திருமலைக்கு வரும் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்ல வழிதெரியாமல் குழம்பி வருகின்றனர்.
அவர்களின் வசதிக்காக திருமலையில் பல இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வெளிவட்டப் பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், பக்தர்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்ல எளிதாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், அவர்களின் வசதிக்காக சனிக்கிழமை திருமலை முகப்பிலும், முக்கிய பகுதிகளிலும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பார்த்து, பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு விரைவாக குழப்பமின்றி செல்ல முடியும். இந்தப் பலகைகள் அனைவருக்கும் புரியும்படி தெலுங்கு மற்றும் ஆங்கிய மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.