புதுதில்லி: சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களை பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.
இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.
அதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவியேற்ற 2 நாள்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலைக்குழு அதிரடியாக அறிவித்தது. இதேபோல சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் அண்மையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவே தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காமன் காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சட்டத்தின்படி சிபிஐக்கு இடைக்கால இயக்குநர் என ஒருவரை நியமிக்க முடியாது எனவும், தில்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி முழுப்பொறுப்புடன் புதிய இயக்குநரைத்தான் நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிபிஐ இயக்குநர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுமீதான விசாரணை வரும் இன்று 21 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ தேர்வு குழுவில் தாம் இடம்பெற்றிருப்பதால் இந்த வழக்கில் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேறு ஒரு அமர்வு முன்பு இந்த வழக்கானது வருகிற 24 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.