மேக்கேதாட்டு அணை: விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது.
மேக்கேதாட்டு அணை: விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு


மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும் என்று தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. 

இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதியும், புதுச்சேரி அரசு 
டிசம்பர் 8-ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி தொடுத்தது. 

தமிழகம், புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்களில் மேக்கேதாட்டு அணை, குடிநீர்த் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிரம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்தாண்டு நவம்பர் 22-ஆம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தன. 

இதையடுத்து, இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  

இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு தரப்பில் கூறுகையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கே நலன் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. மத்திய அரசு தரப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வந்தது.  

இந்நிலையில், மேக்கேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com